ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியில்...
என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள்தான் உள்ளது. என் தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டுவிட்டு, பிரபாகரன் தப்பிப் போய் இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என வீரமாக சண்டை செய்தவர் பிரபாகரன், தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பிப் போகும் கோழை என பிரபாகரனை நினைக்கிறீகளா? போர் முடிந்து, ஒரு பேரழிவைச் சந்தித்த பின் 15 ஆண்டுகள் ஓர் இடத்தில் பத்திரமாக தங்கியிருப்பார், எதுவும் பேசாமல் இருப்பாரா? பிரபாகரன் சொல்லிவிட்டு வருபவர் அல்ல. வந்து விட்டு சொல்வார். அதுதான் அவர் பழக்கம், சொல்லுக்கு முன் செயல் என கற்பித்தவர். தேவையற்று குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு நாள் மக்கள் முன்பு தோன்றுவார் என அவர்களே சொல்கின்றனர்.
தோன்றும்போது பேசுவோம் எனவும் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, நேரில் வந்தால் என்ன சொல்வீர்கள் என பெரியாரிடம் கேட்டபோது, அதில் இருந்து இருப்பதாக சொல்லி விடுவோம் என பதில் சொன்னார். அதுபோல, பிரபாகரன் நேரில் வந்து விட்டால், வந்தது முதல் பேசுவோம்.
திமுகவினரிடம் பணம் உள்ளது. அதனால், இடைத்தேர்தலில் புழக்கத்தில் விடுகின்றனர், தற்போது வங்கியில் கொள்ளை அடிக்கும் வடமாநிலத்தவர், பின்பு நாட்டையே கொள்ளையடிப்பார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பிரபாகரன் குறித்து நெடுமாறன் என்னிடம் எதுவும் பேசவில்லை. மாவீரர் தினத்தன்று பிரபாகரன் இருக்கிறார் என்று பேசுமாறு லண்டனில் இருந்து தொடர்பு கொண்டு என்னிடம் சொன்னார்கள். அவரையே சொல்லச் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டேன். அதனை விவாதத்திற்கு எடுக்காமல் கடந்து போவது நல்லது.
திருமகன் ஈவெரா எங்கள் கட்சியில் இணைய விரும்பியது குறித்து அவரது நண்பர் ஸ்ரீராம் பதிவிட்டுள்ளார், ஈவிகேஎஸ் இளங்கோவன் விரும்பாததால், அவர் இணையவில்லை. கருணாநிதி குறித்தும், இடைத்தேர்தல் குறித்தும் முன்பு கூறிய கருத்துகளை இப்போது மாற்றிக் கொண்டுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் போல் மாறி மாறி என்னால் பேச முடியாது.
ஈரோடு கிழக்கில் அனைத்து அமைச்சர்களும், முன்னாள் முதல்வராக இருந்தவரும் பிரச்சாரம் மேற்கொள்வது ஜனநாயக அத்துமீறல். நாங்கள் எப்படி பிரச்சாரம் மேற்கொள்வது? நாடெங்கும் இடைத்தேர்தல் நடந்தால், சாலைகள் அனைத்தும் சீராகும். உளவியலாக தொண்டர்களை தயார் செய்ய அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக கட்சிகள் கூறுகின்றன.
திமுக அதிகாரத்தில் உள்ள போது, தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதிகாரத்தை பயன்படுத்தி, கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைத்தே தீருவோம் என்றால், நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி நாங்கள் உடைத்தே தீருவோம்.
ஏற்கனவே சிவாஜி, கண்ணகி சிலைகள் அகற்றப்படவில்லையா? நெல்லினை சேமிக்க ஒரு கிடங்கு அமைக்க முடியவில்லை, தெருவில் கொட்டி வைக்கும் நிலை உள்ளது.
டாஸ்மாக் சரக்கை சேமிப்பு கிடங்கில் வைக்கிறீர்கள். முரசொலி அறக்கட்டளை பணத்தை கொண்டு நினைவுச்சின்னம் வையுங்கள். அதையும் கடலுக்குள் வைக்கக் கூடாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உழைப்புதான் தேர்தலில் வெற்றி பெறும் என பேட்டியளித்தார்.
இதனைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
0 coment rios: