ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாதம் தோறும் நடந்தது. ஆனால் மண்டல அளவிலான கவுன்சிலர்கள் கூட்டங்கள் இதுவரை நடத்தப்படவில்லை. ஒரு ஆண்டுக்கும் மேலாக மண்டல (வார்டுகள் குழு) கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்றும் பதில் அளித்து வந்தனர்.
பொதுவாக மாநகராட்சி மன்ற கூட்டம் நடத்துவதற்கு முன்பாக மண்டல தலைவர்கள் மண்டலம் வாரியாக அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அதில் மக்கள் நல திட்டங்கள் வார்டில் உள்ள பிரச்சினைகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது உண்டு. இப்படி நடத்தும்போது பல பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கிடைக்கும்.
அந்த வகையில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பு ஏற்ற பின் கடந்த மாதம் முதல் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலும், மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மண்டல கூட்டம் நடத்துவது தொடர்பாக கோரிக்கை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து மண்டல கூட்டங்கள் நடத்த ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
அதன்பேரில் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டல கூட்டம் நாளை (27ம் தேதி) காலை 9.30 மணிக்கு சூரியம்பாளையத்தில் உள்ள மண்டல அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். மண்டலத்துக்கு உட்பட்ட 14 கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.
0 coment rios: