கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு அருகே உள்ள கூரபாளையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வாய்க்காலில் உள்ள பழைய கட்டுமானங்களை உள்ளது உள்ள படியே சீரமைக்க வேண்டும். 34 கசிவு நீர் திட்டப் பாசன விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். வாய்க்கால் பாசன திட்டத்துக்கு நிலம் தந்த விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அனைத்து கடை மடை வரை உறுதியாக தண்ணீர் செல்ல ஏதுவாக கீழ்பவானி வாய்க்காலை ஆண்டுதோறும் முறையாக தூர் வார வேண்டும். பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும்.
பாசன சபைக்கு முறையாக தேர்தல் நடத்த வேண்டும். 'மண் அணை, மண் வாய்க்கால் மக்களுக்கானது' என்ற முழக்கத்தை முன்வைத்து, விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் காத்திட, வரும் டிசம்பர் 14ம் தேதி ஈரோடு, திண்டலில் இருந்து நடைப் பயணமாக ஆட்சியர் அலுவலகம் சென்று அவரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த நடைபயணம் வெற்றி பெறவும், கீழ்பவானி பாசன விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், வரும் 26ம் தேதி கோபி அருகில் உள்ள குருமந்தூர் ரவுண்டானா பகுதியில் இருந்து இருசக்கர வாகன பிரசார பயணம் தொடங்க உள்ளது.
இப்பிரசார பயணம் கோபி, கவுந்தப்பாடி, குஞ்சரமடை, நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், மூலக்கடை, காஞ்சிக்கோயில், கருங்கரடு, நசியனூர், கூரபாளையம், மேட்டுக்கடை, புங்கம்பாடி, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், வெள்ளோடு, அனுமன் பள்ளி, அறச்சலூர், மேற்கு தலவு மலை வழியாக சென்னிமலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நிறைவு பெற உள்ளது. இத்தகவலை கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தெரிவித்தார்.
0 coment rios: