செவ்வாய், 28 நவம்பர், 2023

ஈரோட்டில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது; 78 பவுன் மீட்பு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 78 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தனிப்படை அமைத்து  பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் இன்று (நவ.28) காலை மேட்டுக்கடை நசியனூர் ரோடு ஒத்த சடையப்பலு கோவில் எல்பிபி வாய்க்கால் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் போலீசாரின் கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தார். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து 4 பேரை போலீசார் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில்,  அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 57), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தௌபிக்ரஹமான் (வயது 26), ஆண்டனி ராபின்சன் (வயது 26), மற்றும் சுல்தான் (எ) தயாஸ் (வயது 26) ஆகியோர் சேர்ந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 78 பவுன் நகையை மீட்கப்பட்டனர். இதில், கணேசன் என்பவரது மீது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் சேர்த்து சுமார் 74 வழக்குகள் உள்ளது. மேலும், அதில் 5 வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: