சென்னிமலையில் இருந்து பழனிக்கு ஜன.,1ல் வேல் வழிபாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் வேல் வழிபாட்டு பாடல் வெளியீட்ட பின்னர் வேல் வழிபாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் சண்முகம், செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் ஜன., 1ல் அதிகாலை ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து பழனிக்கு வேல் வழிபாட்டுக்குழு பயணம் மேற்கொள்கிறோம்.
சூரனை வதம் செய்ய பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு வேல் வழங்கியதை நினைவுபடுத்தும் வகையில், வேல் வழிபாட்டு பயணம் நடக்க உள்ளது.
இதன்படி ஜன., 1 அதிகாலையில் சென்னிமலை கோவிலில் வேல் வழிபாட்டுக்குழுவினர், பக்தர்கள் பங்கேற்று, தாங்கள் கொண்டு வரும் வேலை அங்கு வழிபாடு செய்கிறோம். அங்குள்ள பின்னாக்கு சித்தர் சன்னதி, மலை பாறையிலும் வைத்து வழிபாடு செய்து அவரவர் வாகனங்களில் பழனி செல்கிறோம்.
அங்கு போகர் சன்னதி, தண்டாயுதபாணி சன்னதி, புலிப்பானி சித்தர் சன்னதியிலும் வேல் வழிபாடு செய்து, திரும்ப திட்டமிட்டுள்ளோம். இந்த வழிபாட்டு பயணத்தில், சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமமானந்த குமரகுருபர சுவாமிகள் உட்பட 11 ஆதினங்கள், வேலை வழிபாட்டு சான்றோர்கள் முன்னாள் கவர்னர் சண்முகநாதன், பொன் மாணிக்கவேல், இசையமைப்பாளர் கங்கைஅமரன், சினிமா இயக்குனர்கள் பேரரசு, ரஞ்சித் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர் என்றார். பேட்டியின் போது, நிர்வாகி சரவணன் உடனிருந்தார்.
முன்னதாக, இசையமைப்பாளர் கங்கை அமரன் இசையமைத்த வேல் வழிபாட்டு பாடலை வெளியிட்டனர். சென்னையில் மழை அதிகம் உள்ளதால், கங்கை அமரன் பங்கேற்க இயலவில்லை, என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
0 coment rios: