செவ்வாய், 26 டிசம்பர், 2023

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30.50 லட்சம் மோசடி; ஜோதிடர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவருடைய மகன் பூவழகன் (வயது 37), எம்.ஏ. பட்டதாரி. இவர் சாயப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். பூவழகனுக்கு, கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யன்காடு காரியகுப்பண முதல் வீதியை சேர்ந்த ஜோதிடர் மற்றும் திருமண தகவல் மையம் வைத்து நடத்தி வரும் அன்பானந்தன் (53), அவரது மனைவி கோகிலா என்கிற கோகிலாம்பாள் அறிமுகமாகினர்.

இதைத்தொடர்ந்து அன்பானந்தன், பூவழகனிடம் தனக்கு ஜோதிட தொழில் மூலம் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அறிமுகம் உள்ளதாகவும், அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் ஜோதிட வாடிக்கையாளர்களாக உள்ளதாகவும், அவர்களிடத்தில் தனக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதாகவும், இதன் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும் அன்பானந்தன் ரூ.20 லட்சம் கொடுத்து தான் தனது மகளுக்கு அரசு செவிலியர் பணி வாங்கியதாகவும், பூவழகனிடம் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பி பூவழகன் கடந்த 2019-ம் ஆண்டு அன்பானந்தனிடம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.  ஆனால், பணத்தை பெற்ற அன்பானந்தன் தான் கூறியபடி அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து பணத்தை திரும்ப கேட்டதற்கு, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை அன்பானந்தன், கோகிலாம்பாள் ஆகியோர் பூவழகனிடம் வழங்கி உள்ளனர். ஆனால், அந்த வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது.

அதைத்தொடர்ந்து பூவழகன் இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு  துணைக் கண்காணிப்பாளர்  மணிவர்மன் விசாரணை நடத்தியதில், பூவழகன் மட்டும் அல்லாது ஈரோட்டை சேர்ந்த மலர்கொடி, செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி ஆகியோரது மகன்களுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி மொத்தம் ரூ.30 லட்சத்து 50 ஆயிரத்தை அன்பானந்தன் பெற்றுக்கொண்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு குற்றப்பிரிவு போலீசர் வழக்கு பதிவு செய்து, ஜோதிடர் அன்பானந்தனை இன்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அன்பானந்தனின் மனைவி கோகிலாம்பாளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: