புதன், 13 டிசம்பர், 2023

கோபி அருகே வரதட்சணை கேட்டு பெண் கொலை: கணவர் உட்பட 3 பேர் கைது..!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள பி‌.மேட்டுப்பாளையம் பூமாண்டகவுண்டனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50). இவரது மகள் பூரணி (வயது 29). பொறியியல் பட்டதாரியான இவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து உள்ளார். வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் பூரணிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்த பூரணி, கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவரை சிசிச்சைக்காக சேர்த்தபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பூரணி ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பூரணியின் பெற்றோர் மகளை பார்க்கச் சென்றபோதும் மதன்குமார் குடும்பத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி பார்க்க விடாமல் செய்துவிட்டனர். இதனையடுத்து பூரணி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் கோபி கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் பூரணியின் உடல் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரதே பரிசோதனையில் பூரணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த சென்றபோது, மதன்குமார் குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, மதன்குமார் அவரது பெற்றோர் யுவராஜ், பூங்கொடி ஆகிய மூன்று பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் மதன்குமார் அவரது பெற்றோர் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிடித்து விசாரணை நடத்தினர்.

பலமுறை சொத்தை பிரித்து வாங்கி வருமாறு மனைவி பூரணியிடம் மதன்குமார் கூறியுள்ளார். ஆனால், அதை பூரணி ஏற்க மறுத்து விட்ட நிலையில், இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், பூரணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி மதன்குமாரும் அவரது பெற்றோரும் சேர்ந்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: