அதிமுக மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நசியனூர் சாலையில் உள்ள ஸ்ரீ ஆனந்தம் மஹாலில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொண்டர்கள் மத்தியில் ஓ பன்னீர்செல்வம் பேசினார், இக்கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, வைத்திய லிங்கம், மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், மாவட்ட நிர்வாகி தங்கராஜ், மாரப்பன், எ.பி.என் கோவிந்தன், சசிகலா பெருமாள், பிரபாகர், ரமணி காந்த், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஜெயலலிதா வருமான வரித்துறைக்கு செலுத்த கட்சி நிதியில் இருந்து ரூ.2 கோடி கடனாக பெற்று திருப்பி கொடுத்தார் என்று நான் தெரிவித்தேன். அதை ஜெயலலிதா கடன் பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தவறாக புரிந்து கொண்டு செயல்படுகிறார். அதற்கான வரவு-செலவு கணக்கு அப்போதைய பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமராக வர பணியாற்றுவோம். எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்வதற்கான காரணம் ரகசியமாக வைத்துள்ளேன். நேரம் வரும்போது மக்களுக்கு தெரியப்படுத்துவேன்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது டி.டி.வி. தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது 11 எம்.எல்.ஏ.க்களுடன் நான் ஆதரிக்காமல் இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழ்ந்திருக்கும். அந்த நன்றி எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது.
தி.மு.க.வின் ‘பி’ டீமாக நான் செயல்படுவதாக கூறுபவர் முட்டாள் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
சசிகலாவை நானே தொடர்பு கொண்டு பேசினேன். சரியான நேரத்தில் ஒன்று சேருவோம் என்று அவர் கூறி இருக்கிறார். சசிகலா, டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்து நாங்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது, என்றார் அவர்.
0 coment rios: