கடம்பூரில் வாயில் காயத்துடன் சுற்றி திரிந்த யானைக்கு வனத்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் அதிகம் உள்ள கடம்பூரில் மலைப்பகுதியில் கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட, பவளக் குட்டை, ஏலஞ்சி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக 10 வயதுள்ள ஆண் காட்டு யானை ஒன்று வாயில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தண்ணீர் குடிக்க முடியாமலும், உணவு திண்ண முடியாமலும் வாயில் காயத்துடன் உடல்நிலை குன்றிய நிலையில் சுற்றி திரிந்தது.
யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய தோட்டத்தில் சுற்றி வருதை கண்ட அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் வனப்பகுதியில் சுற்றி கொண்டு இருந்த யானையை கண்டறிந்தனர். ரேஞ்சர் ரவிச்சந்திரன், சத்தி புலிகள் காப்பக வன கால்நடை டாக்டர் சதாசிவம், வனத்துறை ஊழியர்களுடன் சென்று அங்கு உடல் நலம் குன்றிய நிலையில் சுற்றி திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
மயக்க நிலையில் இருந்த அந்த யானைக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து யானையை பவானிசாகர் அருகே உள்ள வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிசிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு யானையை கொண்டு செல்ல வனத்துறை ஆம்புலன்ஸ் இல்லாததால் டெம்போ வேனில் ஏற்றி வன கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை உடல் நலம் தேறி சாப்பிட தொடங்கியவுடன் வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்றனர்.
0 coment rios: