ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடந்தது.
இதை முன்னிட்டு காலையில் கோவை மறைமாவட்ட பொருளாளர் அருண் ஞானப்பிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. தொடர்ந்து ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டு உள்ள கொடிக்கம்பத்தில் புனித அமல அன்னை உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது.
அப்போது கூடி இருந்த பக்தர்கள் 'மரியே வாழ்க' என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். புனித அமல ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் உடன் இருந்து பிராத்தனை செய்தனர்.
திருவிழா சிறப்பு நிகழ்வாக வருகின்ற 7-ந் தேதி வியாழக்கிழமை முதல் 9-ந் தேதி சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிக்கு இறையரசு தியான மையத்தின் இயக்குனர் அருட்தந்தை விஜய் அமல்ராஜ் பங்கேற்று, திருப்பலி நிறைவேற்றி சிறப்பு தியானத்துக்கு வழிகாட்டுகிறார். இந்த நாட்களில் ஆலயத்தை சுற்றி மாதாவின் வேண்டுதல் தேர் எடுக்கப்படுகிறது.
10-ந் தேதி காலை 8.15 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை நல்லாயன் குருத்துவ மடத்தின் முதன்மை குரு நிறைவேற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட வக்கீல் ஆரோக்கிய பிரதீப் தலைமையில் ஈரோடு மறைவட்ட குருக்கள் பங்கேற்கும் தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து தேர் பவனியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகளை புனிதஅமல அன்னை ஆலய பங்குத்தந்தையும் ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஆரோக்கிய ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்கள்.
0 coment rios: