பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, போனஸ் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு கடந்த 5-11-2023 முதல் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி கொடுத்துள்ளது. அதேபோல, கடந்த 18-12-2023 முதல் கடந்த 31-12-2023 வரை கணக்கிட்டு எங்களுக்கான ஊக்கத் தொகையையும் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தணிக்கைத் துறையில் சிறப்பு அனுமதி பெற்று பால் உற்பத்தியாளர்களுக்கான பொங்கல் போனசும் வழங்கப்பட்டு விட்டது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், பால் வளத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ராமசாமி கவுண்டர், மாநில செய்தித் தொடர்பாளர் ராஜூ, மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், முருகேசன், கோவை மாவட்டத் தலைவர் சின்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 coment rios: