ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சத்தியமங்கலம் அடுத்துள்ள தலைமலை ஊராட்சிக்குட்பட்ட மாவனத்தம் எனும் பகுதியில் ஒற்றை யானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தது. அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டை சூறையாடியது. யானை வீட்டை நோக்கி வருவதை அறிந்த கணேசன் வீட்டில் இருந்து தப்பி ஓடினார். வீட்டில் வேறு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
எனினும் ஒற்றை யானை அவரது வீட்டு தகர சீட்டுகளை உடைத்து எரிந்தது. அங்கிருந்த பொதுமக்கள் பேட்டரி டார்ச் மூலம் யானையின் முகத்தில் அடித்து கூச்சலிட்டு யானையை விரட்டினர். பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலை பகுதியில் திகினாரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டுயானைகள் ரங்கசாமி கோவில் தோட்டம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தின. காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் விவசாயிகள் உதவியுடன் சுமார் அரை மணி நேரம் போராடி 2 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டினர்.
0 coment rios: