சனி, 17 பிப்ரவரி, 2024

திருமணத்திற்கு மறுத்த மாணவியை கொல்ல முயன்ற இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை

ஈரோடு பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் நவீன் என்கிற புவனேந்திரன் (வயது 21). இவர், கடந்த 2021ஆம் வருடம் டிசம்பர் மாதம் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வீட்டிற்கு தெரியாமல் கடத்தி செல்ல முயன்றுள்ளார்.

இதற்கிடையே அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வாகனத் தணிக்கையின் போது இருவரையும் பிடித்தனர். இதையடுத்து, மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, புவனேந்திரனை போக்சோ மற்றும் கடத்தல் வழக்கின் கீழ் கைது செய்தனர்.

அதன்பின், ஜாமீனில் வந்த புவனேந்திரன், கடந்த 2022 நவம்பரில் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே, அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, புவனேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியின் கழுத்தில் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து , புவனேந்தினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணை ஈரோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், போக்சோ மற்றும் கடத்தல் வழக்கில் புவனேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிடவும் பரிந்துரைத்தார்.

இதுதவிர, சிறுமியை கொலை செய்ய முயன்ற மற்றொரு வழக்கில் புவனேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புவனேந்திரன் ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: