கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாக கர்நாடக மாநிலம் தேவனகந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் குழாய் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு இருகூர்-தேவனகந்தி பைப்லைன் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டமானது பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு ஆகிய வட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, குழாய்கள் அனைத்தும் விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லப்பட உள்ளதால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தாமரைப்பாளையத்தில் இந்து சமய அற நிலையைத் துறைக்கு சொந்தமான இடத்தின் வழியாக பெட்ரோலிய குழாய் செல்ல உள்ளது. மேலும், இந்த இடத்தில் பம்பிங் ஸ்டேசன் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள பெட்ரோலிய குழாய் அமைக்கும் ஐடிபிஎல் நிறுவன அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் வந்த இருந்தனர். ஆனால், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து பெட்ரோலிய குழாய் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் பணிகள் மேற்கொண்டு வருவதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொடுமுடி அருகே க.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த கோரியும், அதனை விவசாய விளை நிலங்கள் அல்லாத பகுதிகள் வழியாக கொண்டு செல்ல வலியுறுத்தியும், கையில் பதாதைகளை ஏந்திய படியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 coment rios: