சனி, 10 பிப்ரவரி, 2024

சித்தோடு அருகே மயான வசதி கோரி உயிரிழந்தவரின் சடலத்துடன் போராட்டம்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கன்னிமார்காடு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மயான வசதி இல்லாததால், யாரேனும் உயிரிழந்தால் காலிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள மயானங்களில் புதைத்தும், எரித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த செங்கோடன் மகன் சாமிதுரை (வயது 39) பெயிண்டிங் வேலைக்குச் சென்றபோது மயங்கி விழுந்தார். இதனையடுத்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், உயிரிழந்த சாமிதுரையின் உடலை, பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, கன்னிமார்காடு பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாததால், உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்ல மறுத்து பெற்றோர்கள், உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஈரோடு வட்டாசியர் முத்துகிருஷ்ணன், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் மற்றும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு மாத காலத்தில் பொது மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாமிதுரையின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: