ஞாயிறு, 17 மார்ச், 2024

ஈரோட்டில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை நேற்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதில் தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்ப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபரான வடிவேல் இன்று காலை சுமார் 7 மணி அளவில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை சோதனையிட்டு காரில் ரூ.3 லட்சம் பணம் இருந்ததை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.

ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்பதை மீறி ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதால் அவரிடம் இருந்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் வடிவேலிடம் அந்த பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது, உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: