சனி, 16 மார்ச், 2024

ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகள் குறித்து வீடியோ ஒளிப்பதிவாளர்கள், வங்கியாளர்களுக்கான கூட்டம்

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதையடுத்து நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு, செலவின கணக்குக் குழு உள்பட ஈரோடு மாவட்டத்தில் 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் இன்று மாலை முதல் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் வாகன சோதனை, வேட்புமனு தாக்கல், பிரசார நேரம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. இந்த பணியில் ஈடுபட உள்ள ஒளிப்பதிவாளர்களுக்கான விதிமுறைகள் விளக்க கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், ஒளிப்பதிவாளர்களின் பணி நேரம், பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை உரிய அலுவலரிடம் ஒப்படைப்பது, வாகன சோதனையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட விபரங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

இதேபோல வங்கியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. வேட்பாளர்கள் செலவின கணக்கு மேற்கொள்ள வங்கி கணக்கு தொடங்குதல், ஏடிஎம்களுக்கு பணம் கொண்டு செல்லும்போது, உரிய ஆவணங்களை வைத்திருப்பது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: