குலதெய்வக் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாக கூறி, ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஆடு மற்றும் கோழிகளுடன் கிராம மக்கள் மனு அளிக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு அருகே உள்ள அடுக்குப்பாறை என்ற இடத்தில் கருப்பண்ண சுவாமி, காளியம்மன், கன்னிமார் சுவாமி மற்றும் விநாயகர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சுமார் 200 ஆண்டுகளாக 45 குடும்பத்தை சேர்ந்தவர்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் அமாவாசை தினத்தன்று வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய கிராம மக்கள் சென்றபோது கோவில் இருக்கும் பகுதியைச் சேர்ந்த ராசு மற்றும் பழனிச்சாமி குடும்பத்தினர் சுவாமியை வழிபாடு செய்ய வந்தவர்களை தடுத்து மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, நேற்று மகா சிவராத்திரியன்று தங்களது குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து கிடாய், வெட்ட முயற்சித்த போது அவர்களை ராசு தடுத்ததாக கூறப்படுகிறது.
எனவே, கோவில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்ய பாதுகாப்பு வழங்குமாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்
அதிகாரியிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தற்போது, ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 coment rios: