வியாழன், 14 மார்ச், 2024

குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி பவானி காவல் நிலையத்தில் புகார்

சமீபத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பாஜ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுத்தால் பிச்சை போட்டால் அவங்க திமுகவுக்கு வாக்களிச்சிருவாங்களா.? என குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கொச்சைப்படுத்திப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதை கண்டித்து, மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மகளிர் உரிமை தொகையை கொச்சைப்படுத்தி பேசிய நடிகை குஷ்பு மீது ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறாக பேசிய குஷ்பு மீது உரிய நடவடிக்கை எடுக்க பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக பவானி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தமிழக அரசின் திட்டத்தை அவமதிக்கும் வகையில் விமர்சித்துப் பேசிய நடிகை குஷ்பு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: