தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த காலகட்டத்தில் உரிய ரசீதுகள், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் சோதனையை முடித்துவிட்டு மேட்டூர் - பவானி சாலையில் வட்டாசியர் அலுவலகத்திற்கு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சன்னியாசிபபட்டி அருகே உள்ள ரைஸ்மில் மேடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழிவிட முயன்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் இடதுபுறம் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பழனிச்சாமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தலைமை காவலர் செல்வக்குமார், பெண் காவலர் தேவி, வீடியோகிராபர் தீனா, கார் டிரைவர் சச்சிதானந்தம் உட்பட 6 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி போலீசார் காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: