அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.
அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளாக அனுசரிக்க அரசாணை வெளியிடப்பட்டு, அதன்படி, சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சமத்துவ நாள் உறுதி மொழியான, சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்பச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்.
சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமாற உறுதி ஏற்கிறேன் என ஆட்சியர் வாசிக்க, அதை அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பின்தொடர்ந்து ஏற்றுக் கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா (பொது) உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: