வெள்ளி, 19 ஏப்ரல், 2024

ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு

மக்களவைத் தேர்தலில் ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, எம்எல்ஏக்கள் சரஸ்வதி, ஜெயக்குமார், வெங்கடாசலம், திமுக வேட்பாளர் பிரகாஷ், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் வாக்களித்தனர்.

ஆட்சியர் வாக்களிப்பு:- 

ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்காளர்கள் பலர் ஆர்வமாக வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சம்பத் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

எம்எல்ஏக்கள் வாக்களிப்பு:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி ஈரோடு பெரியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 224 எண் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பெருந்துறையை அடுத்துள்ள பொன்முடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.


அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் குடும்பத்தினருடன் அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிழக்கு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 94ல் வாக்கினைப் பதிவு செய்தார்‌. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் கவர்னருமான சதாசிவம் துணைவியார் சரஸ்வதியுடன் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மையத்தில் உள்ள வாக்குசாவடி எண் 67ல் வாக்களித்தார்.

வேட்பாளர்கள் வாக்களிப்பு:-

ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோளக்கவுண்டன்பாளையத்தில் உள்ள ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோளங்கபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார்.

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காலிங்கராயன்பாளையம் மேட்டுநாசுவாம்பாளையத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது சின்னமான சைக்கிளில் வந்து வாக்கினை பதிவு செய்தார். இதேபோல், திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலம் பெருந்துறையை அடுத்துள்ள பெரியவேட்டுவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: