ஞாயிறு, 12 மே, 2024

ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு அபராதம்

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்யும் பொருட்டு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன் மற்றும் அருண்குமார் ஆகியோர் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் மூன்று கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி தலா ரூ.25,000 அபராதம் விதிக்கவும் கடையை மூடி சீல் இட கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு உள்ளதா என தீவிர சோதனை நடத்தி அவ்வாறு இருப்பின் உடனடியாக கடையை மூடி சீலிட உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி முதல் தற்போது வரை தனி மற்றும் குழு ஆய்வு மூலமாக 239 கடைகளில் 805 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அபராதமாக 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது தொடர்பான புகாருக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: