திங்கள், 20 மே, 2024

சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்ற ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரும்பள்ளம் அணையின் நீர்த்தேக்க பகுதியில் கடந்த சில நாட்களாக சோர்வடைந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், உடல் நலக்குறைவாலும், போதிய உணவை உட்கொள்ளாமலும் அணைப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானை இன்று (திங்கட்கிழமை) காலை திடீரென கீழே படுத்து எழ முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி, வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.

ஆனால், கால்நடை மருத்துவ குழுவினர் அளித்த தொடர் சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் படுத்த நிலையில் இருந்த யானை இன்று மதியம் உயிரிழந்தது. இதனையடுத்து, அந்த யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தினர். பின்னர், பள்ளம் தோண்டி யானையை புதைத்தனர்.

கடந்த சில மாதங்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. இந்நிலையில், பெரும்பள்ளம் அணைப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானை உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் வனத்துறை மற்றும் வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: