வியாழன், 13 ஜூன், 2024

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மூலம் உடலை பரிசோதனை செய்து உடலில் உள்ள குறைபாடுக்குகேற்ப சதவீத அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்று திறனாளிகளுக்கான அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிலையில், இன்று (ஜூன்.13) வழக்கம் போல நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு தாளவாடி, கோபி, பவானி உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை செய்யவில்லை எனவும், கடந்த 3 வாரமாக சான்றிதழ் கேட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்படுவதாகவும் கூறி, அரசு மருத்துவமனை வளாகம் முன்பு ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மலைப்பகுதியில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து முறையாக சான்றிதழும் வழங்குவதில்லை. கடந்த 3 வாரமாக எங்களுக்கு முறையாக சான்றிதழ் வழங்காமல் எலும்பு முறிவு மருத்துவர்கள் அலங்கரிக்கிறார்கள். சத்தியமங்கலம், கோபியில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகளை இங்கு சான்றிதழ் பெற வரக்கூடாது.

அந்தந்த பகுதியிலேயே சென்று வாங்க வேண்டும் என்று அலைக்கடிக்கிறார்கள். தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியில்லை என்று கூறி சான்றிதழ் வழங்குகிறார்கள். முகாமிற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளும் வருவதில்லை. மேலும், இதுகுறித்து சுகாதார இணை இயக்குனரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் குற்றம் சாட்டினார்.

இதன் பின்னர், அரசு தலைமை மருத்துவமனை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை என புகார் கூறி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: