புதன், 17 ஜூலை, 2024

ஈரோட்டில் 15 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்

ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் 15 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (17ம் தேதி) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் ஈரோடு மண்டலத்திற்கு 2021-2024ம் ஆண்டு வரை மொத்தம் நகர்ப்புற பேருந்துகள் 9ம், புறநகர் பேருந்துகள் 36ம் என 45 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில் ஏற்கனவே 30 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, 14 புறநகர் பேருந்துகளும் 1 நகரப் பேருந்தும் என 15 புதிய பேருந்துகள் இன்று (17ம் தேதி) முதல் இயக்கப்படுகிறது. ஈரோடு - மைசூர் (வழி) சத்தி, சாம்ராஜ் நகர் 7 பேருந்துகளும், கோவை-மைசூர் (வழி) சத்தி சாம்ராஜ் நகர் 3 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மேலும், ஈரோடு - நாகர்கோயில் (வழி) கரூர் 2 பேருந்துகளும், ஈரோடு - குமுளி (வழி) திண்டுக்கல், தேனி ஒரு பேருந்தும், அந்தியூர் - கம்பம் (வழி) திண்டுக்கல், தேனி ஒரு பேருந்தும், கோபி-சத்தி (வழி) பங்களாப்புதூர், நால்ரோடு ஒரு பேருந்தும் என மொத்தம் 15 புதிய பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.

இப்பேருந்துகள் பாரத் ஸ்டேஜ் 6 (பிஎஸ்6) மிக குறைந்த புகை வெளியிடும் நவீன பேருந்துகளாகும். இந்த புதிய வழித்தடங்களின் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 2021 முதல் ஜூன் 2024 வரை 30,86,64,613 மகளிர்கள், 19,07,294 மாற்றுத்திறனாளிகள், 74,460 மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர்கள் மற்றும் 1,47,697 மூன்றாம் பாலினத்தவர் பயனடைந்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலர்கள், கோபிசெட்டிபாளையம் மற்றும் பெருந்துறை வட்டாட்சியர் ஆகியோருக்கு அலுவலக பயன்பாட்டிற்காக தலா ரூ.9.46 லட்சம் வீதம் ரூ.37.86 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய ஈப்பு வாகனங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் ஸ்வர்ணலதா (ஈரோடு மண்டலம்) உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: