திங்கள், 15 ஜூலை, 2024

ஈரோடு வட்டத்தில் வரும் 18ம் தேதி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (15ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, வரும் 17ம் தேதியன்று மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் 18ம் தேதி வியாழக்கிழமையன்று உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் ஈரோடு வட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்தில் 18ம் தேதியன்று காலை 9 மணி முதல் மறுநாள் 19ம் தேதி காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல்‌ தொடர்பாக உரிய தீர்வு காண்பார். மேலும், 18ம் தேதியன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: