திங்கள், 15 ஜூலை, 2024

ஈரோடு மாவட்டத்தில் 36 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (15ம் தேதி) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் எலவமலை அரசு நிதியுதவி பெறும் ஏ.பி.எஸ். பாரதி கல்வி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் 31,008 அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 14,40,350 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 1,079 பள்ளிகளுக்கு சுமார் 47,000 மாணவ, மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, காமராஜர் பிறந்த நாளான இன்று (15ம் தேதி) ஊரகப் பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவாக்கத்தினை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். காமராஜருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உணர்வோடு துவக்கி வைத்துள்ளார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள 4,154 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,56,705 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 36 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் 3,055 மாணவர்கள் பயன் பெறவுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டம் மற்றும் 2ம் கட்டம் சேர்த்து 1,115 பள்ளிகளைச் சேர்ந்த 50,055 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து, எலவமலை ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்காக 6 பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திரு.பிரகாஷ், மகளிர் திட்ட இணை இயக்குநர் ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ், ஈரோடு மாநகராட்சி 1-ம் மண்டல குழுத் தலைவர் பி.கே.பழனிசாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: