செவ்வாய், 16 ஜூலை, 2024

ஈரோட்டில் வாகன சோதனையில் பிடிபட்ட குட்காவை பதுக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரபு (வயது 28) மற்றும் சிவக்குமார் (வயது 30) ஆகியோர் போக்குவரத்து காவலர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் கடந்த 12ம் தேதி மாலை பவானி கூடுதுறை அருகே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 295 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, சரக்கு வாகனம் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்கள் பிரபு மற்றும் சிவக்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று அவற்றை பதுக்கி வைத்தனர்.

இதையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் வேனின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், வாகனத்தின் உரிமையாளர் வாகனம் கடத்தல் மற்றும் குட்கா பதுக்கிய விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட போக்குவரத்து காவலர்களான பிரபு, சிவக்குமார் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் வாகன சோதனையில் பிடிபட்ட குட்காவை ரகசியமாக வேறு இடத்தில் பதுக்கி, டிரைவரிடம் பேரம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது.

இதன்பேரில், போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவக்குமார் 2 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: