வெள்ளி, 18 அக்டோபர், 2024

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வேட்டை தடுப்புக் காவலர்கள் வனக்கோட்ட அலுவலரிடம் மனு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள், பணி வரன் முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வனக்கோட்ட அலுவலரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தியமங்கலம் வனக் கோட்ட அலுவலர் குலால் யோகேஷ் விலாசிடம் மனு அளித்தனர். அதில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட விளாமுண்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர் ஆகிய 6 வனச்சரகங்களிலும் சுமார் 59 வேட்டை தடுப்புக் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .

பெரும்பாலானோர் பட்டியலின, பட்டியல் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். மேலும், சாதாரண ஏழை-எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்களுமாவர். எங்களில் பெரும்பாலானோர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம். வனப் பாதுகாப்பு பணியில் துறையின் அதிகாரிகளின் உத்திரவுகளுக்கு ஏற்ப, எந்தவித பணிப் பாதுகாப்பும் அற்ற நிலையிலும் கூட நாங்கள் சிரத்தையோடு எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.

வேட்டைத் தடுப்புக் காவலர்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களை பணி வரன் முறை செய்யப்படுவது போல, எங்களின் பணியினையும் வரன் முறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். ஆனால் எங்கள் நம்பிக்கையில் இடி விழுந்ததைப் போல, எங்களை வெளி முகாமைக்கு மாற்றும் நடவடிக்கைகளை துறை எடுத்து வருவதாக அறிகிறோம்.

வெளி முகாமைக்கு எங்களை மாற்றும் பட்சத்தில் எங்கள் பணி பாதுகாப்பற்றதாக ஆகிவிடுவதோடு, எதிர்காலத்தில் பணி வரன் முறைப்படுத்தல் என்பதும் அறவே இல்லாததாகி விடும். எனவே, வேட்டை தடுப்புக் காவலர்களாகிய எங்களை வெளி முகாமைக்கு மாற்றாமல், தொடர்ந்து தொகுப்பூதியத்திலேயே பணிபுரிய வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: