ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூரில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே எருமைக்குட்டை வனப்பகுதியை ஒட்டிய உள்ள தோட்டத்து மின் வேலியில் சிக்கி நேற்று காலை மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை) இறந்து கிடந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர் யானையின் உடலை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, இறந்தது மக்னா யானை. அந்த யானைக்கு சுமார் 25 வயது இருக்கும். வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய யானை அருகே உள்ள தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது என்றனர்.
இதைத்தொடர்ந்து யானையின் உடலை மீட்ட வனத்துறையினர் அங்கேயே புதைத்தனர். மேலும், தோட்டத்தில் மின்வேலி அமைத்த உரிமையாளர் யார்?, மின்வேலியில் நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: