Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Erode லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

ஈரோடு: விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல்

ஈரோடு: விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல்

விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என ஒன்றிய அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்று ஈரோட்டில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறினார்.

 ஈரோட்டில் இன்று (6ம் தேதி) சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட குழு அலுவலக திறப்பு விழா வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கட்சியின் அகில இந்திய தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார்.

மேலும், சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி குறித்து ஊடகங்களில் குறிப்பிடுவது போல அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைந்து கட்சிப் பணிகளுக்கு திரும்புவார்.

வன வளத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க, புலிகள் காப்பக பகுதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களை வெளியேற்றும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் சரணாலயத்தில் வசிக்கும் 25 ஆயிரம் மலைவாழ் மக்களை வெளியேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் கடிதம் அனுப்பி உள்ளது. வனத்தின் உள்பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு மக்களற்ற காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு இதனை செய்து வருகிறது.

இதற்காக, வன பாதுகாப்பு திருத்த சட்டம் 2023ஐ கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக கனிம வளம் மற்றும் வன வளம் பெரிய நிறுவனங்களுக்கு வழங்க வழிவகை செய்கிறது. எனவே, புலிகள் காப்பகத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். காலம் காலமாக அங்கு வசித்த மக்களை வெளியேற்றுவது சட்டவிரோதமானது.

மேலும், இது வன உரிமை சட்டம் 2006க்கு எதிரானதாகும். 1972 வனச் சட்டத்தின் படி அந்த மக்களின் ஒப்புதல் பெறாமல் அவர்களை வெளியேற்றுவது தவறான நடவடிக்கையுமாகும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும், இதற்காக ரூ. 14 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருப்பதாக ஒன்றிய அரசு கூறுவது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.

இதற்காக, சில நாட்களுக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவையில் 7 புதிய திட்டங்களை அறிவித்திருப்பதும், விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்குவோம் என்பது சாத்தியமற்றது. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும். அதைத் தவிர்த்து இது மாதிரியான செயல்கள் அவர்களை ஏமாற்றும் செயலேயாகும்.

ஏற்கனவே, ஒன்றிய அரசு நிறைய அறிவிப்புகளை இதுபோல் வெளியிட்டுள்ளது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போதைய அறிவிப்பும் அதுபோலத் தான் இருக்கும். தமிழ்நாட்டில், காலாவதியான சுங்கச்சாவடிகள் விதிமுறைகளுக்கு மாறாக இயங்கி வருகின்றன. அவற்றை ஒன்றிய அரசு அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு புதிய வனக் கொள்கையை உருவாக்குவதற்கு குழு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், அதில் மலைவாழ் மக்கள் நலனை முன் வத்து செயல்படும் அமைப்பினரை இடம் பெறச் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் அதில் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வனக் கொள்கையை உருவாக்குவதில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை இடம்பெறச் செய்யும் வகையில் மலைவாழ் மக்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளுக்கு அதில் உரிய இடத்தை அரசு தர வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை அரசு நிச்சயம் பரிசீலனை செய்ய வேண்டும்.

வாச்சாத்தி வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி ஓராண்டாகியும் அதில் பல அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக பாதிக்கப்பட்ட 18 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை தரப்பட வேண்டும், அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

அந்த கிராம மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும். அப்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடி மக்களின்றி, 18 குடும்பத்தினர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இப்பேட்டியின்போது சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி. பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
ஈரோடு மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை : அமைச்சர் தொடங்கி வைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை : அமைச்சர் தொடங்கி வைப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனம் மற்றும் அலுவலர்கள் பயன்பாட்டிற்கு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 21 வாகனங்களின் சேவையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாம இன்று (6ம் தேதி) தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 2 கால்நடை பன்முக மருத்துவமனைகள், 6 கால்நடை மருத்துவமனைகள், 106 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 24 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 10,52,285 கால்நடைகள் மற்றும் 61,87,054 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டம் கால்நடை பன்முக மருத்துவமனைகள், மொடக்குறிச்சி, பவானி, தாளவாடி, அந்தியூர், பெருந்துறை வட்டம் சென்னிமலை, கொடுமுடி வட்டம் கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவமனைகள் என 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், இன்று (6ம் தேதி) 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்த்திகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனத்திற்கு மருந்துகள், பணியாளர் ஊதியம், தொலைபேசி கட்டணம், எரிபொருள் மற்றும் இதர செலவினங்களுக்காக ஒரு மாதத்திற்கு ரூ.1.63 லட்சம் வீதம் 7 வண்டிகளுக்கு ரூ.11.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளில் தலா 1 கால்நடை உதவி மருத்துவர்,1 கால்நடை உதவியாளர், 1 ஓட்டுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ ஊர்திகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், 1962 அழைப்பு மையம் (கால் சென்டர்) மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் 14 வாகனங்கள் என மொத்தம் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 21 வாகனங்களின் சேவையினை தொடங்கி வைத்து வாகனங்களின் சாவியை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் பழனிவேல், ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கவின் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.1.30 லட்சம் பறிமுதல்

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.1.30 லட்சம் பறிமுதல்

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்தனர். 
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரியாக பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (6ம் தேதி) அவர் வழக்கமான அலுவலக பணிகளில் ஈடுபட்டிருந்த போது, இவ்வலுவலகத்திற்குள் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராஜேஸ் மேற்பார்வையில் ஆய்வாளர் ரேகா தலைமையில் ஆய்வுக்குழு ஆய்வாளர் சதீஷ் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென நுழைந்தனர்.

பின்னர், அங்கிருந்த இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேற விடாமல் அமர வைத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பின் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பொறுப்பு மோட்டார் வாகன ஆய்வாளர் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரனின் வலது கரமாகவும், அவரின் தனிப்பட்ட உதவியாளராகவும் செந்தில் என்ற நபர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. 

மேலும், அவரிடம் கத்தை கத்தையாக லஞ்சமாக பெறப்பட்ட ரொக்க பணமும் அந்த பணத்துடன் எந்த வாகனத்திற்கு எவ்வளவு தொகை என்ற விபரம் அடங்கிய ஆவணங்களையும் இருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

இதனையடுத்து பொறுப்பு அதிகாரியான மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர், அங்கிருந்த இடைத்தரகர்களிடம் இருந்து கைப்பற்றிய லஞ்சப் பணத்தை மொத்தமாக எண்ணிப் பார்க்கையில் அதில், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, லஞ்சப் பணமாக பிடிபட்ட தொகையினை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த பணம் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 5 செப்டம்பர், 2024

ஆப்பக்கூடல் அருகே ரூ.15 ஆயிரம் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை

ஆப்பக்கூடல் அருகே ரூ.15 ஆயிரம் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரிச்சேரி இந்திராநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் தமிழ்செல்வன் (வயது 20) என்பவர் பிரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை திருடினார். 

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வீடு புகுந்து திருடிய தமிழ்செல்வனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.

இதைத்தொடர்ந்து, கோவையில் உள்ள மத்திய சிறையில் தமிழ்செல்வன் அடைக்கப்பட்டார்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஈரோட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: ஈரோட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

இதுதொடர்பாக, அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வருகிற 6ம் தேதி (வெள்ளிகிழமை), 7ம் தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த தினம் ஆகிய நாட்களில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

எனவே, இவ்வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது: ஈரோடு ஆட்சியர்

பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது: ஈரோடு ஆட்சியர்

இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (5ம் தேதி) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் வரப்பெறும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்களை பெறுவதற்கு மறுக்கக் கூடாது. சட்டபூர்வமான நாணயங்களை ஏற்க மறுப்பது சட்டத்திற்கு எதிரானது.

எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் ஆகியோர் தங்களுக்கு எவரிடமிருந்தும் வரப்பெறும் 10 ரூபாய் நாணயங்களைப் மறுக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதன், 4 செப்டம்பர், 2024

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிப்பு பணி நாளை (6ம் தேதி) வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இதனால், கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம். தெரிவித்துள்ளார்.

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதை:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈரோடு குமலன்குட்டை பேருந்து நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை ரோடு, வி.ஐ.பி. காலனி, திரு.வி.க.வீதி, ராணாலட்சுமணன் நகர் மற்றும் ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபியில் வீட்டுக்கு தீ வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி

கோபியில் வீட்டுக்கு தீ வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் அருண்ரங்கராஜன் (வயது 38). இவர் கடந்த 2012ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலம் கலாபுர்கி மாவட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி இலக்கியா. இவரும், கர்நாடக மாநில முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், அருண்ரங்கராஜன் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய போது அதே பிரிவில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சுஜாதா (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் போலீசாக பணியாற்றி வந்த நிலையில், அருண்ரங்கராஜன், சுஜாதா இடையேயான பழக்கம் குறித்து கண்டப்பாவுக்கு தெரியவந்தது.

இதுபற்றி கண்டப்பா அருண்ரங்கராஜனின் மனைவி இலக்கியாவிடம் கூறி உள்ளார். இதன் காரணமாக அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த சுஜாதாவும், அருண்ரங்கராஜுடன் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அருண்ரங்கராஜன் மற்றும் சுஜாதா ஆகியோர் கோபிக்கு வந்தனர்.

அப்போது, ஏற்பட்ட தகராறில் அருண்ரங்கராஜ் சுஜாதாவை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ரங்கராஜை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அருண்ரங்கராஜன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது தற்காலிக பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஓரிரு நாளில் மீண்டும் பணியில் சேர இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், சுஜாதா மீண்டும் கோபி வந்து அருண்ரங்கராஜனுடன் தங்கி இருந்து வந்துள்ளார். நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டவே, சுஜாதாவை அருண்ரங்கராஜன் தாக்கியுள்ளார். இதனால் சுஜாதா வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். பின்னர், ஆத்திரத்தில் இருந்த அருண்ரங்கராஜன் தன்னுடைய வீட்டின் படுக்கை அறைக்கு தானே தீ வைத்துக் கொண்டு உள்ளேயே இருந்துள்ளார். தீ வீடு முழுவதும் பரவி புகை வெளியேறியது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இருந்தபோதிலும், வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகின.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று வீட்டுக்குள் இருந்த அருண்ரங்கராஜனை மீட்க முயன்றனர். அப்போது அருண்ரங்கராஜ் காவல் ஆய்வாளரை தாக்கியதாக தெரிகிறது. அதன் பின்னர் அருண்ரங்கராஜனை அங்கிருந்த மற்ற போலீசார் மீட்டு கோபி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடமும், சுஜாதாவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அருகே நள்ளிரவில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

சத்தியமங்கலம் அருகே நள்ளிரவில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கல்கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 31). இவரது மனைவி ரேவதி (வயது 23). கர்ப்பிணியான ரேவதிக்கு இன்று (4ம் தேதி) நள்ளிரவு 1.20 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் ரேவதியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை நோக்கி புறப்பட்டு சென்றனர். ஆம்புலன்சை அரப்புளிசாமி என்பவர் ஓட்டினார்.

ஆம்புலன்ஸ் கே.என்.பாளையம் ஸ்டேட் பாங்க் அருகே சென்ற போது ரேவதிக்கு பிரசவ வலி அதிகமாகி குழந்தை பிறப்பதற்கான அறிகுறி இருந்ததால், வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, அவசர கால மருத்துவ நுட்புணர் விஜய் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், தாய், சேயை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நள்ளிரவில் ஆள் அரவமற்ற பகுதியில் சமயோசிதமாக செயல்பட்டு, இரண்டு உயிர்களை காப்பாற்றி, பாதுகாத்த ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் விஜய், ஓட்டுநர் அரப்புளிசாமி ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ஈரோடு சோலாரில் ஒன்றுகூடிய ரெட் டாக்ஸி ஓட்டுநர்களால் பரபரப்பு

ஈரோடு சோலாரில் ஒன்றுகூடிய ரெட் டாக்ஸி ஓட்டுநர்களால் பரபரப்பு

ஈரோட்டில் வாடகை வாகன ஓட்டுநர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றதால் ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சோலாரில் ஒன்றுகூடி காரை ஒரு சேர நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரெட் டாக்ஸி ஓட்டுநர் சுரேஷ். இவர் இன்று (4ம் தேதி) ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள வித்யா நகரில் பயணியை டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், பெருந்துறையில் இருந்து பயணியை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது பெருந்துறை காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள அப்பகுதியை சேர்ந்த தனியார் வாடகை ஓட்டுநர்கள் சுரேஷின் டாக்ஸியை வழிமறித்துள்ளனர்.

பின்பு, ஈரோடு கால் டாக்ஸிகளுக்கு, பெருந்துறை வாடகை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி சுரேஷ் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், சுரேஷின் காரில் இருந்த பயணியை காரில் இருந்து இறங்கச் சொல்லி, பெருந்துறை பகுதியை சேர்ந்த தனியார் வாடகை ஓட்டுநர் ஒருவர் அவரது காரில் ஏற்றி வித்யா நகரில் உள்ள அவரது வீட்டில் இறக்கி விட்டுள்ளார். 

இந்நிலையில், தங்களின் வாகனத்தில் இருந்த பயணிகளை வேறொரு வாகனத்தில் அத்துமீறி ஏற்றியதை கேள்விப்பட்ட ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று தனியார் வாடகை ஓட்டுநரிடம் நியாயத்தை கேட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பெருந்துறை தனியார் வாடகை கார் ஓட்டுநர் அவர் வைத்திருந்த கத்தியால் ரெட் டாக்ஸி ஓட்டுநர்களை குத்த வந்ததாக ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த ரெட் டாக்ஸ் ஓட்டுநர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு, ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கார்களில் வந்து சோலார் பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரெட் டாக்ஸி ஓட்டுநர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாடகை கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

மேலும், அனுமதி இன்றி ஒன்று கூடி இருந்து வருவது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் இல்லை என்றால் அனைவர் மீது வழக்கு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

இதனையடுத்து, தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட ரெட் டாக்ஸி ஒன்று கூடி புதிதாக கட்டி வரும் பேருந்து நிலையத்தில் நின்றதால் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் விடுமுறைக்காக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்

ஈரோட்டில் விடுமுறைக்காக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்

ஈரோடு அவல்பூந்துறை ரோடு செட்டிபாளையம் பகுதியில் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (2ம் தேதி) காலை 10.30 மணிக்கு பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என பள்ளி இ-மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பள்ளிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கூட கட்டிடங்கள், வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.

அன்று மாலை வரை முழுமையான சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் சந்தேகப்படும் படியாக எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த இ-மெயில் எங்கிருந்து வந்தது என ஈரோடு தாலுகா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த இ-மெயில் அதே பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அனுப்பி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த 2 மாணவர்கள் மற்றும் அவருடைய பெற்றோர்களை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த 2 மாணவர்களும் வேறு ஒரு பள்ளியில் இருந்து ஜேசீஸ் பள்ளிக்கு இந்த ஆண்டு படிக்க சேர்ந்து உள்ளனர்.

ஆனால், மாணவர்கள் 2 பேருக்கும் இந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லை. இதனால் மாணவர்கள் 2 பேரும் திட்டமிட்டு பள்ளிக்கூடத்துக்கு தங்களுடைய செல்போனில் இருந்து இ-மெயில் அனுப்பியது தெரியவந்தது.

பின்னர், 2 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களிடம் போலீசார் கூறுகையில், இதேபோல் செயல்பட்டால் வழக்குப் பதியப்படும் என கடும் எச்சரிக்கை செய்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (5ம் தேதி) வியாழக்கிழமை நடக்கிறது.

இதனால், கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈங்கூர் துணை மின் நிலையம்:-

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர், வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, தோப்பு பாளையம், பெருந்துறை ஆர்.எஸ். மற்றும் பெருந்துறை வீட்டுவசதி வாரியம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி அருகே வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் 5½ பவுன் தாலிக்கொடி பறித்த பெண் கைது

கோபி அருகே வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் 5½ பவுன் தாலிக்கொடி பறித்த பெண் கைது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள 5 கார்னர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 67). இவர் நேற்று (3ம் தேதி) மதியம் சுமார் 2 மணியளவில் வீட்டில் படுத்திருந்தார். அப்போது, வீட்டினுள் நுழைந்த பெண் ஒருவர் சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துக்கொண்டு ஓடினார்.
இதனால், அதிர்ச்சியடைந்து சின்னம்மாள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் ஒடிச்சென்று அந்த பெண்ணை பிடித்து கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில், அந்த பெண் வாய்க்கால் ரோடு மங்கம்மாள் வீதியைச் சேர்ந்த சுமதி (வயது 35) என்பதும், அவர் சின்னம்மாள் வீட்டில் 3 மாதங்களாக வாடகைக்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, சுமதியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 5½ பவுன் தாலிக்கொடியை மீட்டனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகன் சுப்ரதீபன் (வயது 21). இவர் அந்தியூர் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரை முன்விரோதம் காரணமாக பவானி அருகே உள்ள பெரியமோளபாளையத்தை சேர்ந்த 8 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சுப்ரதீபன் அளித்த புகார் பொய்யானது எனக்கூறி அவரது வீட்டில் அந்தியூர் போலீசார் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நோட்டீஸ் ஒட்டினர். இந்த நிலையில், சுப்ரதீபன் நேற்று (3ம் தேதி) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் விரைந்து சென்று சுப்ரதீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, நேற்று இரவு 7 மணி அளவில் சுப்ரதீபனின் உறவினர்கள், அவருடைய தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்ததும் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். எனினும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சம்பவத்தால் அந்தியூர் - பர்கூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெருந்துறை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதன்படி, இன்று (3ம் தேதி) மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.46.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப்பணியினையும், பெருந்துறையில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு நூலகத்தில் பயில வரும், மாணவ, மாணவியர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பெருந்துறை பேரூராட்சி, ஜீவா நகர் பகுதியில் பாதாள சாக்கடையுடன் வீட்டு கழிவு நீர் குழாய்களை இணைக்கும் பணியினையும், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டிடம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பெருந்துறை, சிலேடர் நகர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளின் வருகை, மருந்துகளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பேரூராட்சிகளில்  11 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் முத்துசாமி

ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பேரூராட்சிகளில் 11 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்படி, ஆப்பக்கூடல் பேரூராட்சி, ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிமேம்பாட்டு மானியத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டும் பணியினையும், அயோத்தி தாஸ் பண்டிர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆப்பக்கூடல் வார்டு எண்11 அம்பேத்கார் வீதிக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் கவர் சிலேப் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாநில ஆணையம் நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட சுக்காநாயக்கனூர் ரோடு, காந்திஜி வீதி, அந்தியூர் மெயின் ரோடு ராசாயால் குறுக்கு வீதி, அம்பேத்கார் வீதி முதல் கல்லங்காட்டு மேடு சந்திப்பு, அம்பேத்கார் வீதி குறுக்கு வீழுதிகள் மற்றும் அம்பேத்தகார் வீதி முதல் கவுந்தப்பாடி மெயின் ரோடு இணைப்பு வரை தார்சாலை அமைத்தல் பணியையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணியினையும், ஒலகடம் பேரூராட்சி பழைய பேரூராட்சி அலுவலகம் அருகில் (பெருமாள் கோவில் வீதி), கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணியினையும், மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணியினையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் முதல் குன்றியூர் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், வார்டு எண்.8 குந்துபாயூர், வார்டு எண்.3 மும்மிரெட்டிபாளையத்தில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், நெரிஞ்சிபேட்டை பேரூராட்சி வார்டு எண் 7 கோரிவீதி மசூதி அருகில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கருங்கரடு பாலமலை ரோடு மற்றும் முருகன் ரைஸ்மில் ரோடு பழுதடைந்த சாலையினை புதிய தார்சாலையாக மேம்பாடு செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 1 சின்னப்பள்ளம் மேல்தெரு 1, 2வது வீதி, சர்ஜ் வீதி, சின்னப்பள்ளம் கீழ் தெரு 1, 4வது வீதி, வார்டு எண் 3 சித்தையன் நகர் 1, 2, 3, 4வது வீதி வரை மற்றும் வார்டு 14 ஆரியாக்கவுண்டனூர் அரிஜன காலனி பழுதடைந்த சாலையினை புதியதார்சாலையாக மேம்பாடு செய்தல் பணியினையும் தொடங்கி வைத்தார்.

மேலும், அம்மாபேட்டை பேரூராட்சி பாரதியார் வீதியில் ரூ.47.99 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.9 கடுமாங்கொட்டாய், வார்டு எண்.15 பாரதியார் வீதி குபேரன் நகர் மெயின் வீதி, 1, 2வது வீதிக்கு தார்சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், பேரூராட்சி தலைவர்கள் கேன்.என்.வெங்கடாசலம் (அம்மாபேட்டை), எஸ்.செல்வி (ஆப்பக்கூடல்), கே.வேலுசாமி (ஒலகடம்), டி.ராஹினி (நெரிஞ்சிப்பேட்டை), பேரூராட்சி செயல் அலுவலர்கள் சதாசிவம் (அம்மாபேட்டை, ஆர்.அன்புசெல்வி (ஆப்பக்கூடல்), (ஒலகடம் (பொ), என்.சிவகாமி (நெரிஞ்சிப்பேட்டை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் 22வது தடகள விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் 22வது தடகள விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாநகராட்சி வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் 22வது தடகள விளையாட்டுப் போட்டியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்து தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்ட தடகள சங்கம் ஏறத்தாழ ஒரு 25 ஆண்டு காலமாக மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
தடகள சங்கத்தினர் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முன்னெடுத்து சிறப்பாக செய்து வருகின்றார்கள். ஏறத்தாழ 22 ஆண்டுகள் மாவட்டத்தில் போட்டியை நடத்தி இந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திருக்கிறார்கள்.‌ அதே போன்று 5 முறை மாநிலப் போட்டிகளும் நடத்தியிருக்கிறார்கள்.

ஆயிரம் பேருக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்பட்டு அந்த போட்டியிலே அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைகிற வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 100 வீரர், வீராங்கனைகளை தேசிய வீரர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். 20 வீரர், வீராங்கனைகளை சர்வதேச வீரர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் வித்யா ராமராஜன் அவர்கள் ஈரோடு மாவட்ட விடுதியில் தங்கி பயிற்சி பெற்றவர்கள் இன்றைக்கு பிரான்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் நம்முடைய ஈரோட்டிற்கும் பெருமை சேர்க்கிற அளவிற்கு சாதனையை செய்திருக்கிறார்கள்.

அதேபோல, பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியனாக வந்திருக்கிறார்கள். விளையாட்டு துறையில் மிகப்பெரிய அளவிலே நம்முடைய மாணவ, மாணவியர்கள் வரவேண்டும் என்பதற்காக அதற்கான வசதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்க செயலாளர் கோவிந்தராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சிந்தகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32). இவருடைய வீடு புகுந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டன்குட்டைய சேர்ந்த சங்கர் (வயது 34) என்பவர் ஒரு பவுன் தங்க காசு, ரூ.2 ஆயிரத்தை கடந்த 2022ம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி திருடினார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். 

இதுதொடர்பான வழக்கு பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வீடு புகுந்து திருடிய சங்கருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் சங்கர் அடைக்கப்பட்டார்.

திங்கள், 2 செப்டம்பர், 2024

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் மொடக்குறிச்சி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், மொடக்குறிச்சி மஞ்சக்காட்டுவலசு, நேரு வீதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவக்குமார் (வயது 22), மஞ்சக்காட்டுவலசு ஒரத்திமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் பிரித்திவிராஜ் (வயது 19), மொடக்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த குருநாதன் மகன் கமலக்கண்ணன் (வயது 20), மொடக்குறிச்சி எம்.வேலம்பாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி மகன் ராகுல் (வயது 22) ஆகியோர் என்பதும், இதில் பிரித்விராஜ் என்பவர் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகளை பறி முதல் செய்தனர்.
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.11 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.11 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் சார்பில் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணமடைந்த கட்டுமாத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் 4 நபர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண நிதியுதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 10 நபர்களுக்கு நலவாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிகளையும் என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.